இத்தனை அமளியிலும்.. தமிழர்களுக்கு "புத்தாண்டு" வாழ்த்து சொன்ன மோடி!
அடையாறு புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
Recommended Video
சென்னை: அடையாறு புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் வைரவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி புற்றுநோய் சிகிச்சைக்காக 15 மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
நிலம் கிடைக்க
மருத்துவ சிகிச்சைகளுக்கான மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். முன்னதாக மருத்துவமனைக்கு நிலம் கிடைக்க உதவுமாறு பிரதமருக்கு மருத்துவமனை தலைவர் சாந்தா வேண்டுகோள் விடுத்தார்.
சாந்தாவுக்கு பாராட்டு
சாந்தாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். 10 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோயில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் முத்துலட்சுமி ரெட்டி வழியில் மருத்துவர் சாந்தா செயல்படுவதாகவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு பயன்பெறும்
15-வது நிதிக்குழு வரம்பு குறித்த புகார்களுக்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடும் நிதிக்குழுவால் பயன்பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
புத்தாண்டு வாழ்த்து
தமிழக அரசுடன் கலந்து பேசி சாந்தா கோரிக்கை குறித்து ஆவன செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மேலும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தியாகிகளுக்கு பெருமை
நாம் எல்லோரும் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்; அதுவே நம் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.