ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி
கோவை ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோக சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
கோவை: ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட்டிருந்த 112 அடி உயர சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இன்று மகா சிவராத்திரியையொட்டி கோவை ஈஷா மையத்தில் 112 அடி உயர சிவன் சிலை நிறுவப்பட்டது. இதைத் திறப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார். தமிழக- கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது, யானைகள் உலவும் இடத்தில் ஈஷா யோகா மையத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கோயில் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, 200-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது தமிழகம் வராத பிரதமர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விமான நிலையம் வரும் பிரதமர் விழா நடைபெறும் இடத்தில் சாலை மார்க்கமாக செல்லமாட்டார் என்பதை தெரிந்த போராட்டக்காரர்கள் கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர் மூலம், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தியான லிங்கத்திற்கு தீபாராதனை செய்தார். பிறகு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். அப்போது நெருப்பை கொண்டு யோக கலைஞர்கள் யோக வழியில் வழிபாடு நடத்தினர். பின்னணியில் மந்திர இசை முழங்கியது. 112 அடி உயர ஆதியோக சிவன் சிலையை திறந்து வைத்தார். முன்னதாக ஈஷா யோகா மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவ் மையத்தை, மோடிக்கு சுற்றி காண்பித்தார்.
ஆதியோகி புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.