காவிரி மேலாண்மை வாரியம் அவ்வளவுதானா? எடப்பாடி கோரிக்கையை புறக்கணித்த மோடி
சென்னை: விழா மேடையில் நேரிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைவிடுத்தும்கூட, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தையும் பேசவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின், பணியாற்றும் பெண்களுக்கான, மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.
விழாவில் முதன்மை உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் பழமையான மொழி என மாணவர்களுடனான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சமீபத்தில் பேசியதற்கு நன்றி தெரிவித்தார்.
மோடி எதிர்பார்க்கவில்லை
மேலும், மோடியை மேடையில் வைத்துக்கொண்டே, அவர் முன்னிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன் வைத்தார். இப்படி ஒரு கோரிக்கையை பொது மேடையில் எடப்பாடி பழனிச்சாமி முன்வைப்பார் என மோடி எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முக பாவனைகளில் இருந்து தெரியவந்தது.
எதிர்பார்ப்பு
இதன்பிறகு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். எனவே அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அவர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, காலையில் அளித்த பேட்டியொன்றில், காவிரி விவகாரம் தொடர்பாக நல்ல முடிவை மோடி விரைவில் அறிவிப்பார் என கூறியிருந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது.
மோடி வாசித்த பட்ஜெட் உரை
ஆனால், மோடி ஏதோ மத்திய அரசின் பட்ஜெட் உரையை வாசிப்பது போல பெண்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை பட்டியல் போட்டு பேச ஆரம்பித்துவிட்டார். முழுக்க முழுக்க அது மாநில அரசின் நிகழ்ச்சி என்பதை தாண்டி மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை போல மோடியின் பேச்சு அமைந்திருந்தது.
வாய் திறக்கவில்லை
மோடி எதை வேண்டுமானாலும் கூறட்டும், இறுதியில், காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேசுவாரா என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கும், தமிழக முதல்வருக்கும் அதிர்ச்சிதான். ஏனெனில், காவிரி பற்றி வாய் திறக்கவில்லை மோடி. கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காவிரி பற்றி மோடி மூச்சு விடவில்லை என தெரிகிறது.
சபாஷ் சிஎம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, அது நாடாளுமன்றத்தின் வேலை என இதே மோடி அரசின் சார்பில்தான் பதில் அளிக்கப்பட்டது. இப்போது மேலாண்மை வாரியத்தை அமையுங்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்தபிறகும், மோடி அது பற்றி பேசவில்லை. எனவே இப்போதைக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேநேரம், மோடிக்கு தர்ம சங்கடம் என தெரிந்தும், தமிழக நலனுக்காக, மேடையில் இந்த கோரிக்கையை முன்வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.