தம்மும் இல்லை, செல்லும் இல்லைன்னா எப்படி ஏட்டய்யா.. நிர்வாண கோலத்தில் மிரட்டிய கைதி!
செல்போன், சிகரெட் கேட்டு போலீசாரை கைதி மிரட்டியுள்ளார்
Recommended Video
மதுரை: பாதுகாப்பு போலீசாரையே மிரட்டி திகைத்த வைத்த "ஒரு கைதியின் ரகளை" இது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். ஒரு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார், ராஜசேகரனை பரமத்திவேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்ப மதுரை வந்துள்ளனர்.
அதுவரை அமைதியாக இருந்த கைதி ராஜசேகரன் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் தன் வேலைய காட்ட ஆரம்பித்தார். பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம், செல்போனை கொடுங்க... என் பொண்டாட்டிகிட்ட பேசணும். அப்படியே சிகரெட்டும் வாங்கித்தாங்க' என்றார்.
போலீசார் செல்போனும் கொடுக்கவில்லை, சிகரெட்டும் வாங்கித்தர மறுத்துவிட்டனர். ஆனாலும் ராஜசேகரன் விடவில்லை. தொடர்ந்து பாதுகாப்பு போலீசாரை தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன், பொதுஇடம் என்றும் பாராமல், திடீரென தான் உடுத்தியிருந்த ஆடை முழுவதையும் வேகவேகமாக கழட்டி வீசிவிட்டு நிர்வாணமாக நின்றார்.
இப்போது போலீசாரை பார்த்து, 'டேய் போலீசுகளா, போனும் தரமாட்டீங்க... சிகரெட்டும் தரமாட்டீங்களா? சிகரெட், செல்போன் தரலன்னா, நான் என்னையவே கிழிச்சுக் காயப்படுத்திக்குவேன்... இந்த ஆடைகளையும் உடுத்த மாட்டேன்" என்று மிரட்டல் விடுத்தார்.
ஒரு கணம் ஆடிப்போய் விட்ட போலீசார், என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தனர். இப்போது ராஜசேகரன் இன்னும் சத்தம் போட்டு பேச ஆரம்பித்தார். "எனக்கு ஏன் சோறு வாங்கி தரவில்லை... பிரியாணி வாங்கித்தாங்க" என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். இவ்வளவு நடந்தும் பாதுகாப்பு போலீசார் அவரை சமாதானப்படுத்த பொறுமையாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், ராஜசேகரனோ எதற்கும் ஒத்துவரவில்லை. தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கைதி இப்படி நிர்வாணமாக நின்ற தகராறு செய்கிறார் என்ற தகவலறிந்து ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராஜசேகரனுக்கு ஆடைகளை அணிய வைத்தனர். இதுகுறித்து பாதுகாப்பு போலீசார் அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் கைதி ராஜசேகரை மீண்டும் கைது செய்தனர். அத்துடன் போலீசாரை மிரட்டல் விடுத்த காரணத்தால் ராஜசேகரன்மீது 4 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
கடைசிவரை ராஜசேகரன் கேட்ட செல்போனும் கிடைக்கவில்லை, சிகரெட்டும் கிடைக்கவில்லை, பிரியாணியும் கிடைக்கவில்லை. மேலும் ஒரு வழக்கில் போய் மாட்டிக்கிட்டதுதான் மிச்சம். செல்போன், பிரியாணி கேட்டு ராஜசேகரன் நிர்வாணமாக நின்று அமர்க்களம் செய்யும் காட்சிகளும், போலீசார் அவரை சமாதானப்படுத்தும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசாரின் பொறுமை ஓகே... ஆனா ராஜசேகரனுக்கு ஒரு பிரியாணியை வாங்கி தந்திருக்கலாம்!