ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கினால் உயிருக்கு ஆபத்து- சிறைத்துறை பதில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக சிறைத் துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ரவிச்சந்திரனை பரோலில் விடுவித்தால் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சிறைத் துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இவர்கள் 7 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு மேல் சிறையில் இருந்து வருகின்றனர். அண்மையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு என்பதால் அவருக்கு இரு மாதங்களுக்கு பரோல் வழங்கப்பட்டது.
அதுபோல் நளினியும் தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டுள்ளார். எனினும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து பிரச்சினை காரணமாக தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு சிறைத்துறை நிர்வாகம் பதில் மனு அளித்துள்ளது. அதில் சிறைத்துறை கூறுகையில், ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கினால் உயிருக்கு ஆபத்து. ரவிச்சந்திரனின் சொந்த ஊரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.