சென்னை புழல் சிறையில் "ராம்குமார் ஸ்டைலில்" கைதி தற்கொலை முயற்சி!
சென்னை: சென்னை புழல் சிறையில் ஒரு கைதி சுவிட்ச் பாக்ஸை உடைத்து வயரை இழுத்துக் கடித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரை காவலர்கள் தடுத்துக் காப்பாற்றி மீட்டுள்ளனர்.
சமீபத்தில் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் சுவிட்ச் பாக்ஸை உடைத்து வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத் தரப்பு தெரிவித்தது. ஆனால் இதுவரை அவரது மரணத்தின் மர்மம் விலகியபாடில்லை.
இந்த நிலையில் மறுபடியும் அதே பாணியில் ஒரு சம்பவம் புழல் சிறையில் நடந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராஜா. இவர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் சுவிட்ச் பாக்ஸை உடைத்து வயரைக் கடித்துத் தற்கொலை செய்ய முயன்றாராம். இதையடுத்து அருகில் இருந்த காவலர்கள் அவரைப் பாய்ந்து சென்று காப்பாற்றி மீட்டனராம்.
ராம்குமார் உடைத்துக் கடித்த அதே சுவிட்ச் பாக்ஸை டில்லி ராஜாவும் உடைத்தாரா என்று தெரியவில்லை!