தன் நாக்கை தானே கடித்துக் கொண்ட கைதி – காரணம் தெரியாமல் அதிகாரிகள் முழிப்பு
நாகை: நாகர்கோவில் ஜெயிலில் தனக்கு தானே நாக்கை கடித்து கைதி செய்த ரகளையால் ஜெயில் அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் விஜயகுமார்.
கடந்த 8 ஆம் தேதி ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்த இவருக்கும், மருத்துவமனை காவலாளி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது.
போலீஸார் கைது:
இதில் விஜயகுமார் தன்னை தாக்கியதாக காவலாளி சின்னதம்பி கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் விஜயகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அலறிய கைதி:
இந்தநிலையில், இன்று அதிகாலை 2.20 மணிக்கு விஜயகுமார் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயில் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது விஜய குமாரின் உதட்டில் இருந்து ரத்தம் வழிந்தோடிய வண்ணம் இருந்தது.
நாக்கு போச்சே! :
ஜெயிலில் அதிகாரிகள் அறைக்குள் சென்று விஜயகுமாரிடம் என்ன நடந்தது என விசாரித்த போது அவர் தனக்கு தானே நாக்கு, மேல் உதட்டை பலமாக கடித்தது தெரிய வந்தது.
தீவிர சிகிச்சை:
உடனே ஜெயில் அதிகாரிகள் விஜய குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரகளையோ ரகளை:
மருத்துவமனையிலும் விஜயகுமார் கைவிலங்கை அவிழ்க்க முயன்றதோடு, சக நோயாளிகளை தாக்க முயன்று ரகளை செய்து வருவதாகவும், எனவே அவரை பாளையில் உள்ள ஜெயில் கைதிகளுக்கான மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில் போலீஸ்:
மேலும், விஜயகுமார் திடீரென இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.