பிளீச்சிங் பவுடர் உட்கொண்டு ஆயுள்தண்டனைக் கைதி தற்கொலை.. புழல் சிறையில் பரபரப்பு
பிளீச்சிங் பவுடர் தின்று ஆயுள்தண்டனைக் கைதி புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இது சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: புழல் சிறையில் ஆயுள்தண்டனைக் கைதி ஒருவர் பிளீச்சிங் பவுடரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுள் தண்டனைக் கைதியான அந்தோணி ராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று பிளீச்சிங் பவுடரை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட போலீசார், அந்தோணிராஜை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அந்தோணி ராஜ் உயிரிழந்தார். இதனால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புழல் சிறையில் தொடர்ந்து கைதிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மரணம் அடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.