லாக்கப்பில் உள்ளாடையுன் அடைப்பு- மனித உரிமை அமைப்பை நாடிய கைதி!
திருவனந்தபுரம்: தன்னை திருட்டு வழக்கில் கைது செய்து உள்ளாடையுடன் லாக்கப்பில் அடைத்ததால் ஆத்திரம் அடைந்த கைதி ஒருவர் மனித உரி்மை அமைப்பில் புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் அருகே அம்புரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரை சில நாட்களுக்கு முன் திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணை செய்தும் அவர் குற்றத்தை ஒப்பு கொள்வதாக தெரியவில்லை.
இதனால் அவரை உள்ளாடையுடன் விசாரணை அறையான லாக்கப்பில் அடைத்தனர். இதனால் வெகுண்ட அவர் இதுகுறித்து கேரள மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். புகாரில் தன்னை லாக்கப்பில் உள்ளாடையுடன் சிறை வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மனுவை விசாரித்த மனித உரி்மை ஆணைய நீதிபதி கோஷி விளக்கம் கேட்டு போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் அளித்த விளக்கத்தில், "கைதிகளை ஆடைகளுடன் லாக்கப்பில் அடைத்தால் அவர்கள் தூக்கி போட்டு தற்கொலை செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் கைதிகளை ஆடையுடன் லாக்கப்பில் அடைப்பதில்லை" என்று தெரிவித்தனர்.
இதை நீதிபதி கோஷி ஏற்க மறுத்தார். போலீஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் இருக்கும் போது லாக்கபில் அடைக்கப்பட்டுள்ள கைதி தூக்கு போட வாய்ப்பில்லை.
போலீசார் விழிப்புணர்வுடன் பணியாற்றினால் இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. எனவே லாக்கப்பில் கைதிகளை உள்ளாடையுடன் அடைக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள டிஜிபிக்கு நீதிபதி கோஷி உத்தரவிட்டுள்ளார்.