கோர்ட் விசாரணைக்கு வந்த கைதி தப்பி ஓடினார்..!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி மகன் முருகவேல். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில் தூத்துக்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று மாலை தூத்துக்குடி முதாலவது ஜேஎம் கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு அவரை தூத்துக்குடி கிளை சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்த சென்று தென்பாகம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் அவரை கிளை சிறைக்கு கொண்டு வந்தனர்.
இந்த பணியில் தென்பாகம் காவல் நிலைய ஏட்டுகள் லைலா, புதியவேல் மற்றும் போலீசார் கல்பனா, சரவணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மத்திய பாகம் காவல் நிலையம் அருகே முருகவேலை சோப்பு வாங்க போலீசார் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து பதறிய போலீசார், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் முருகவேலை தேடி வந்தனர். அவர் எட்டயபுரத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து அங்கு சென்று அவரை மடக்கி பிடித்தனர்.
கைதி முருகவேல் தப்பியது குறித்து எஸ்பி துரை விசாரணை நடத்தினார். பணியில் கவனக்குறைவாக இருந்து கைதியை தப்ப வி்ட்டதாக தென்பாகம் போலீஸ்காரர் சரவணனை சஸ்பெண்ட் செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் மற்றவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.