3 வாரங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு கடலை எண்ணெய் விற்பனை செய்த சிறைக் கைதிகள்
புழல் சிறையில் கைதிகள் நிலக்கடலை செக்கு ஆடி மூன்று வாரங்களில் ரூ.50,000 கடலை எண்ணெய் விற்பனை செய்துள்ளனர்.
சென்னை: புழல் சிறையில் புதியதாக தொடங்கப்பட்ட கடலை எண்ணெய் செக்கு ஆடும் இயந்திரம் மூலம் சிறைக் கைதிகள் செக்கு ஆடி ரூ.50 ஆயிரத்துக்கு கடலை எண்ணெய் விற்பனை செய்துள்ளனர்.
தமிழக அரசின் சிறைத்துறையின் கீழ் இயங்கும் மத்திய சிறைகளில், பேக்கரி, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவு தொழில் போன்ற குடிசைத் தொழில்கள் சிறைக் கைதிகளைக் கொண்டு செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சிறைத் துறை சென்னை மத்திய புழல் சிறையில் ரூ.4.45 லட்சம் மதிப்பில் நிலக்கடலை செக்கு இயந்திரம் நிறுவப்பட்டது. இதில் புழல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளைக் கொண்டு நிலக்கடலை செக்கு ஆடப்பட்டது. இதன் மூலம் 3 வாரங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு கடலை எண்ணெய் விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து, சிறைத்துறை கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா கூறுகையில், புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் கைதிகளும் இந்த வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் செக்கு இயந்திரம் எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரம் மூன்று வாரங்களுக்கு முன்புதான் நிறுவப்பட்டு செக்கு ஆடும் பணி தொடங்கியது." என்று கூறினார்.
சிறையில் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் வெளியில் மார்க்கெட் விலையை விட 50 ரூபாய் குறைவாக ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை லிட்டர் கடலை எண்ணெய் ரூ.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கடலை எண்ணெயின் தரத்தில் எந்த சமரசமும் இல்லை சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறைத்துறை டிஐஜி ஏ.முருகேசன் கூறுகையில், "ஒரு கிலோ நிலக்கடலையிலிருந்து 400 மில்லி கடலை எண்ணெய் எடுக்கப்படுகிறது. தினமும் புழல் சிறையில் மட்டும் 80 லிட்டர் கடலை எண்ணெய் செக்கு ஆடப்படுகிறது. இதில் வேலை செய்யும் சிறைக் கைதிகளுக்கு தினமும் ரூ.100 ஊதியமாக அளிக்கப்படுகிறது." என்று கூறினார்.
புழல் மத்திய சிறையில் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் புழல் 2 சுதந்திர பஜாரிலும் சைதாப்பேட்டை சப் ஜெயிலிலும், எழும்பூரில் உள்ள கூடுதல் டிஜிபி அலுவலகத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்க்கெட் விலையைவிட குறைவாக விற்பனை செய்வதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறையிலிருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் எல்லா இடங்களிலும் எப்போதும் 50 லிட்டர் இருப்பு இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடலை எண்ணெய் செக்கு இயந்திரம் தொடங்கப்பட்ட 3 வாரங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனால், தேவையின் அடிப்படையில், சிறையில் கடலை எண்ணெய் செக்கு ஆடும் தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் சிறை கைதிகளுக்கு ஷிஃப்ட் முறையில் வேலை கொடுக்க உள்ளதாகவும் சிறைத் துறை டிஐஜி தெரிவித்துள்ளார்.