புழல் சிறையில் பயங்கர மோதல்- 2 ஜெயிலர்களை 5 மணிநேரம் பிணைக் கைதியாக பிடித்த கைதிகள்!!
சென்னை: சென்னை புழல் சிறையில் கைதிகள் மற்றும் காவலர்களிடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகளிடம் இரு ஜெயிலர்கள் 5 மணிநேரம் பிணைக் கைதிகளாக சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 4 ஜெயிலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் சிறையின் 2வது பகுதியில் விசாரணைக் கைதிகள் 1,000 பேர் உள்ளனர். இந்த பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட முஸ்லிம் கைதிகள் பலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் பெங்களூருவில் பதுங்கி இருந்த காஜாமொய்தீன், அப்துல் வகாப், ராஜாமுகமதும், தமீம், அன்சாரி, கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பக்ருதீன் உள்ளிட்டோரும் இப்பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான அப்துல்வகாப்பிடம் இருந்து செல்போனை ஜெயிலர் இளவரசன் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் அனைவரும் ஜெயிலர் இளவரசன் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி, மாரி என்ற மாரியப்பன் உள்ளிட்டோர் இப்பகுதியில் நேற்று மாலை கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கு கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியுள்ளது.
இதில் முத்துமணியும், ஜெயிலர் இளவரசனும் காயமடைந்த நிலையில் கைதிகளிடம் இருந்து தப்பிவிட்டனர். அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டிவந்த கைதிகள் செங்கல் மற்றும் உருட்டுக்கட்டைகளால் ஜெயிலர் இளவரசனை குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து தப்பிவிட்டார் இளவரசன்.
இதைப் பார்த்த மற்ற ஜெயிலர்கள் முத்துமணி, செல்வின்தேவராஜ், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர். ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள்.
அப்போது கைதிகள் ஜெயிலர் முத்துமணியை இரும்பு கம்பியால் குத்தியாக கூறப்படுகிறது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்துவந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர்.
அந்த கைதிகளை சிறைக்குள் அடைத்தபோது, துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிணைக் கைதிகளாக கைதிகள் பிடித்து வைத்துக்கொண்டனர். இதனால் புழல் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா, சென்னை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்து சென்றனர்.
புழல் சிறை வெளிப் பகுதியில் கமாண்டோ படையினர், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். 2 காவலர்களையும் ஆகியோரை விடுவிக்க கைதிகளிடம் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி, மௌரியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 5 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் உதவி ஜெயிலர் குமாரையும், காவலர் மாரியையும் கைதிகள் விடுவித்தனர்.
இம்மோதலில் படுகாயமடைந்த 4 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.