படிப்பிலும், விவசாயத்திலும் வெற்றிக் கொடி நாட்டும் கைதிகள்…
சென்னை: சிறைக்குள்ளே கைதியாக இருந்தாலும் அவர்கள் தற்போது படிப்பிலும், விவசாயத்திலும் விடா முயற்சியால் வெற்றி பெற்று வருகின்றனர்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏதாவது ஒரு குற்றத்தை செய்து விட்டு சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் கைதிகள் தங்களுக்குள் ஒளித்து வைத்துள்ள ஏதாவது ஒரு திறமையை வெளிகாட்டி தற்போது சாதனைக் கொடி நாட்டி வருகிறார்கள்.
சிறைக்குள் இருந்த படியே தங்களது படிப்பை தொடருகிறார்கள். படிப்பில் நல்ல மதிப்பெண் வாங்குகிறார்கள்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி:
சமீபத்தில் நடந்த 10 ஆவது வகுப்பு தேர்வு முடிவுகள் கைதிகளின் திறமையை பறைசாற்றின. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாபநாசம் என்ற கைதி 10 ஆவது வகுப்பு தேர்வில் 500 க்கு 417 மதிப்பெண் பெற்று அசத்தினார்.
நல்ல மதிப்பெண்கள்:
சென்னை புழல் சிறைவாசி ராஜா உசேன் 500 க்கு 405 மதிப்பெண் வாங்கினார். ராஜா உசேன் அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர். திருச்சி சிறையில் நாகராஜ் என்ற ஒரே கைதி மட்டும் 10 வது வகுப்பு தேர்வு எழுதினார். அவரும் 395 மதிப்பெண் பெற்று பாராட்டுதல்களை பெற்றார்.
தொழிலும் அசத்தும் கைதிகள்:
படிப்பில் மட்டுமின்றி தொழில் செய்வதிலும் கைதிகள் அபார சாதனை படைத்து வருகிறார்கள். கைதிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய தற்போது சிறை பஜார் என்ற பெயரில் கடைகளாக திறக்கப்பட்டுள்ளன.
தொழிற் கூடங்கள்:
திருச்சி சிறையில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் நாப்கின் தயாரிக்கும் தொழில் ஜோராக நடக்கிறது. இதற்காக தலா ரூபாய் 10 லட்சம் செலவில் 2 நவீன எந்திரங்கள் வாங்கப்பட்டு 2 தொழிற் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த தொழிற் கூடங்களில் ஆண், பெண் கைதிகள் வேலை செய்கிறார்கள்.
தினமும் சம்பளம்:
இவர்கள் தயாரிக்கும் நாப்கின்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதில் வேலை செய்யும் கைதிகள் தினமும் ரூபாய் 100 வரை சம்பாதிக்கிறார்கள். கைதிகள் விவசாயத்திலும் சோடை போகவில்லை. சிறைக்குள்ளே காய்கறி பயிரிட்டுள்ளனர்.
விரைவில் பெட்ரோல் நிலையங்கள்:
அண்மையில் திருச்சி சிறைக்குள் ஒரு அதிசயம் நடந்தது. அங்கு தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயத்தை பற்றி நன்கு தெரிந்த 4 கைதிகள் விசேஷ பயிற்சி அளித்தனர். விரைவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை கூட கைதிகள் நடத்த உள்ளனர்.