நாளை தந்தைக்கு திதி.. பைக் விபத்தில் இன்று மகன் பரிதாப மரணம்.. நண்பரும் பலியானார்!
தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்: தனியார் பள்ளி பஸ் எதிர்பாராதவிதமாக மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னத்தூரை சேர்ந்த பிரதீப்குமார் என்பவரும், மும்மூர்த்தி நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் குமாரபாளையத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நண்பர்களான இருவரும் கல்லூரிக்கு பைக்கில்தான் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம்போல் இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பினர். குன்னத்தூர் அடுத்த சித்தாண்டிபாளையம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஈரோட்டிலிருந்த வந்த ஒரு தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
இருவரும் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே பிரதீப்குமார் பரிதாபமாக பலியானார். உயிருக்கு போராடிய வெங்கடேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வெங்கடேஷும் உயிரிழந்தார். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
வெங்கடேஷின் தந்தைக்கு நாளை முதலாமாண்டு திதி கொடுக்க இருந்த நிலையில், அதற்கு முதல் நாளே மகன் உயிரிழந்ததை கூறி உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.