விபத்து ஏற்படுத்தியதாக தனியார் பேருந்துக்கு தீ வைப்பு: புதுவை அருகே பதட்டம் !
புதுச்சேரி: புதுவை அருகே விபத்து ஏற்படுத்தியதாக கூறி தனியார் பேருந்தை பொது மக்கள் தீ வைத்து கொளுத்தியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அரியூர் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தின் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அரியூரைச் சேர்ந்த கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இதனிடையே 3 பேர் இறந்ததாக பரவிய தகவலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு பேருந்தை கல் வீசி தாக்கினர். இதில் அந்த பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது. சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். பின்னர் போலீசாரின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.