பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இனி நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு இனி நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் தனித்தேர்வர்களாக இந்த கல்வியாண்டு முதல் நேரடியாக பிளஸ் 2 தனித் தேர்வு எழுத முடியாது என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2018 பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பெறப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வுக்கு வருகை புரியாத தனித்தேர்வர்கள், தோல்வியுற்ற அல்லது வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசாணை எண்.185, பள்ளிக்கல்வி துறை, நாள் 9.08.2017 இன் படி, பழைய நடைமுறை பாடத்திட்டத்தின் படி (200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதி தோல்வியுற்ற மேற்குறிப்பிட்ட வகை தனித்தேர்வர்களுக்கு தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற/வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்.
அரசாணை 1(டி), எண்.573, பள்ளிக்கல்வி துறை, நாள் 03.10.2017 இன் படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வெழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இதுநாள் வரை நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். இந்நிலையில், தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத முடியாது என்ற அறிவிப்பின் மூலம், அவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வை முடித்த பிறகே பிளஸ் 2 தேர்வெழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மட்டுமே பொதுத்தேர்வு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக அரசு பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.