பெரிய அளவில் வெடிக்கும் போராட்டம்.... தனியார் செவிலியர்கள் சங்கம் ஆதரவு
செவிலியர்களின் போராட்டத்திற்கு தனியார் செவிலியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சென்னை : செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காவிட்டால் தாங்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தனியார் செவிலியர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கடந்த மூன்று நாட்களாக டி.எம்.எஸ் வளாகத்தில் போராடி வருகிறார்கள். அமைச்சரிடம் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் செவிலியர்களின் கோரிக்கையை தற்போது ஏற்க முடியாது என்று கைவிரித்து இருக்கிறது அரசு.
அதனால் இன்று காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக அறிவித்து போராடி வருகிறார்கள் செவிலியர்கள். இதுவரை எந்த ஒரு அதிகாரியோ, அமைச்சரோ நேரில் வந்து சந்திக்காத நிலையில் ,போலீஸார் அந்த இடத்தில் இருந்து செவிலியர்களை அப்புறப்படுத்த பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ள நிலையில், திமுக ராஜ்யசபா எம்.பி, கனிமொழி செவிலியர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார். மேலும் , இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது செவிலியர்களின் இந்தப் போராட்டத்திற்கு தனியார் செவிலியர்கள் சங்கம் ஆதரவளித்து உள்ளது. செவியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக தனியார் செவிலியர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது. செவிலியர்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில் அரசு தொடர்ந்து மவுனம் காத்து வந்தால் , தமிழகத்தில் மருத்துவத்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.