தனியார் நிறுவனங்களின் வாயில் "பால்" ஊற்றிய ராஜேந்திர பாலாஜி.. விற்பனை 25% அவுட்!
தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரமாரியாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து சென்னையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் சரிந்துள்ளது.
சென்னை: சென்னையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் சரிந்துள்ளது. தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியதை தொடர்ந்து பால் விற்பனை குறைந்துள்ளதாக பால் முகவர்கள் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக தனியார் பால் நிறுவனங்களை வளைத்து வளைத்து குற்றம்சாட்டி வருகிறார். தனியர் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக குண்டை தூக்கிப்போட்டார்.
தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் தனியார் பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் வரை கெடாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அமைச்சரின் குற்றச்சாட்டு
தனியார் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். கமிஷனுக்காக பால் முகவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தனியார் பால் சோதனை
தனியார் பால் புனேவுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆய்வு முடிவுக்குப் பிறகு கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பால் விற்பனை சரிவு
இந்நிலையில் சென்னையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளதாக பால்முகவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் கூறியதே இதற்கு காரணம் என்றும் பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பால் நிறுவனங்களுக்கு இழப்பு
இதனால் தனியார் பால் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அமைச்சர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றும் பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.