பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. பலர் படுகாயம்
தனியார் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ளது ஜமீன்முத்தூர் பகுதி. இங்கு தனியார் பள்ளி கட்டிடம் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் பெரும்பாலானோர் வடமாநில தொழிலாளர்களே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை திடீரென்று அந்த பள்ளியின் கட்டிடமானது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிக்கு போராடியவர்கள் உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒரிசாவை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும்பணியில் மீட்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவருமே பலத்த காயமடைந்துள்ளதால், உயிரிழப்பு கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டிட விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.