11ம் வகுப்பிலேயே நீட் தேர்வுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள்: கனிமொழி
சென்னை : 11ம் வகுப்பு சேர்க்கையின்போதே, நீட் தேர்வுக்கு என்று சொல்லி சில தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்பி கனிமொழி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் ராஜ்யசபா எம்பி கனிமொழி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு அரசு மேற்கொண்டிருப்பது காலதாமதமான நடவடிக்கை. இருப்பினும் அதனை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில தனியார் பள்ளிகள் நீட் தேர்வுக்கான பயிற்சி என்று சொல்லி லட்சக்கணக்கில் 11ம் வகுப்பு சேர்க்கையின் போதே வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1.5 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆதாரத்துடன் புகார் தெரிவித்து இருக்கிறார்கள் . இதுகுறித்து தமிழக அரசு விரிவான விசாரணை செய்து, அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.