அவை உரிமைக்குழு கூட்டம்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை
பெரும்பான்மை உறுப்பினர் பங்கேற்க வாய்ப்பு இல்லாததால் உரிமை மீறல் குழுவால் சட்டப்பேரவைக்கு எந்த ஒரு பரிந்துரையையும் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: பெரும்பான்மை உறுப்பினர் பங்கேற்க வாய்ப்பு இல்லாததால் உரிமை மீறல் குழுவால் சட்டப்பேரவைக்கு எந்த ஒரு பரிந்துரையையும் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதை சுட்டிக்காட்டுவதற்காக கடந்த ஜூலை 19ஆம் குட்கா பாக்கெட்டுகளை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்து காட்டினர்.
திமுக உறுப்பினர்கள் மீது புகார்
தமிழகச் சட்டமன்றத்துக்குள் குட்காவைக் கொண்டுவந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் மீது உரிமை மீறல் குழுவுக்கு நடந்து முடிந்த சட்டசபை தொடரில் புகார் அனுப்பப்பட்டது.
அவை உரிமைக்குழு
இந்த நிலையில், இப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, அதில் ஒரு முடிவு எடுப்பதற்காக உரிமைக் குழு இன்று கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை உரிமை குழுவில் மொத்தம் 17 உறுப்பினர்கள் உள்ளனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைவராக உள்ளார்.
10 பேர் அதிமுகவினர்
ஆளும் கட்சியை சேர்ந்த 10 பேரும், எதிர்கட்சியை பொறுத்த வரை திமுகவை சேர்ந்த 6 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் 10 பேரில் மூவர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர்.
3 பேர் தினகரன் ஆதரவாளர்கள்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜக்கையன், ஏழுமலை, தங்கதுரை ஆகிய மூன்று பேர் புதுச்சேரி ரிசார்ட்டில் இருக்கிறார்கள். இந்த மூவரும் உரிமை மீறல் குழு கூட்டம் பற்றி தங்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.
இரண்டு பக்கமும் 7 பேர்
மாலை நடைபெற உள்ள உரிமை மீறல் குழு கூட்டத்தில் தம்மையும் சேர்த்து 3 பேர் பங்கேற்கவில்லை என்று உறுப்பினர் தங்கதுரை கூறியுள்ளார்.எனவே அதிமுக மற்றும் திமுக - காங்கிரஸ் சேர்ந்து சரிசமமாக 7 உறுப்பினர்கள் வீதம் உள்ளனர். இதனால் உரிமை குழுவால் சட்டசபைக்கு எந்த ஒரு பரிந்துரையும் அளிக்க முடியாது என தங்கதுரை கூறியுள்ளார்.
சர்ச்சையும் சங்கடமும்
உரிமை மீறல் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தார். இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், இந்த குழுவால் பேரவைக்கு எந்த பரி்ந்துரையையும் அளிக்க முடியாது என கூறப்படுகிறது.
அப்படி பரிந்துரைத்தாலும் சர்ச்சையாகிவிடும்.
வாக்கெடுப்பு
ஒருவேளை உரிமை மீறல் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு சர்ச்சையாகும்பட்சத்தில்... அதாவது அரசுத் தரப்பின் முடிவுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில், உரிமை மீறல் குழுவின் முடிவுகளை சட்டசபைக் கூட்டத்தில் வைத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டும். அப்படி வாக்கெடுப்புக்கு விட வேண்டும். வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில் எத்தனை பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதே கேள்வியாகும்.