இன்று இரவு செய்தியாளர்களுடன் ராஜசேகரன், சிவசேனாபதி, ராஜேஷ், ஹிப்ஹாப் ஆதி சந்திப்பு
ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டம் தொடர்பாக இன்று இரவு ஜல்லிக்கட்டு முன்னோடிகள் ராஜசேகரன், கார்த்திகேய சேனாபதி உள்ளிட்டோரக் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்,
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒரு குழப்பமான சூழலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையே ஹிப்ஹாப் தமிழா ஆதியும் எதிரொலித்துள்ளார். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், முன்னோடிகளுமான பி.ராஜசேகரன், கார்த்திகேய சேனாபதி, ராஜேஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடக்க நிரந்தர சட்டம் கோரியும் நாடே பிரமித்து பயந்து போகும் அளவிலான ஒரு புரட்சியை, எழுச்சியை தமிழகம் கண்டது. கடந்த 7 நாட்களாக நடந்து வரும் எழுச்சி மிக்க போராட்டம் எப்போது முடியும் என்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு முன்பை விட பல மடங்கு உறுதியுடன் போராட்டக் களத்தில் உள்ளனர் இளைஞர்கள், மாணவ, மாணவியர், பெண்கள்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வரும் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகரன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆய்வுக் கழக நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி, திருச்சி வீர விளையாட்டுப் பேரவை செயலாளர் ராஜேஷ், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.+
சென்னை பத்திரிகையாளர் கிளப்பி இன்று இரவு 8 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தொலைபேசி எண்ணும் (98409 04244) தரப்பட்டுள்ளது.