ஜெ. மரணம் குறித்து விசாரணை வைத்தேயாக வேண்டும்.. ஓ.பி.எஸ் திட்டவட்டம்
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் எந்த குடும்பம் இருக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோமோ அந்த குடும்பம் தவறுக்கு மேல் தவறு செய்து மிகப்பெரிய அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக அம்மா அணி சார்பில் குழு இந்த நிலையில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பம் இருக்கும் வரைக்கும் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
ஓபிஎஸ் பேட்டி
தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவினால் கட்டி காக்கப்பட்ட இயக்கம் அதிமுக, அதை ஒரு குடும்பத்தின் கையில் ஒப்படைக்க தயாராக இல்லை என்றும் கூறினார். குடும்பத்தின் கையில் கட்சியும் ஆட்சியும் செல்வதை ஜெயலலிதா விரும்பவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சசிகலா கடிதம்
2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து உதவியாளராக சேர்ந்தவர்தான் சசிகலா. கட்சிப் பொறுப்புக்கு வரமாட்டேன் என்று கூறியவர் சசிகலா.
அவரை பொதுச்செயலாளராக நியமனம் செய்தோம். ஆனால் கட்சியின் பொதுச்செயலாளரை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
அடிப்படை கோரிக்கை
எங்களின் அடிப்படை கோரிக்கையே சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது என்பதுதான். அது இருக்கும் வரை பேசப்போவதில்லை.
நீதி விசாரணை
மேலும் ஜெயலலிதாவிற்க அளித்த சிகிச்சையில் உள்ள மர்மங்களை போக்க வேண்டும், அவரது மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.