துறைமுகத்தினால் விளைநிலங்களுக்கு பாதிப்பா?.. நாகர்கோவில் மக்கள் கேள்வி
சரக்கு முனைய பொட்டகம் அமைப்பது தொடர்பாக அரசு பொய் சொல்லி வருவதாக நாகர்கோவில் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
நாகர்கோவில்: சரக்கு முனைய பொட்டகம் அமைப்பது தொடர்பாக அரசு பொய் சொல்லி வருவதாக நாகர்கோவில் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபா, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்தசாரதி, சம்சுதீன், முருகேசன், தரன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் ''குமரி மாவட்டம் தொழில் வளம் மிக்க மாவட்டமாக மாறும் என்று கடந்த 14ம் தேதி துறைமுக திட்ட அதிகாரி விஷ்ணு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் எழும் ஐயப்பாடுகளை சரி செய்ய வேண்டும்.'' என்றுள்ளனர்.
மேலும் ''குமரியில் 2.4 கி.மீ நீள துறைமுக பகுதியின் இரு முனையில் இருந்து 10 கி.மீ சுற்றளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அந்தந்த பகுதிகளில் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்குகிறது''
துறைமுகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவிதமான பொதுமக்களின் நிலங்களோ அருகில் உள்ள நரியன்விளை, இலந்தையடிவிளை, கோம்பவிளை, முகிலன்குடியிருப்பு, கிண்ணிகண்ணன்விளை, கோவில்விளை ஆகிய கிராமங்களில் உள்ள குடியிருப்புகளோ, விளை நிலங்களோ கையகப்படுத்த வேண்டிய அவசியம் சிறிதளவும் இல்லை என கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் நிலம் கையப்படுத்தப்படாதா என்று உறுதியாக தெரியவில்லை. துறைமுகம் கடலிலும், நிலப்பரப்பிலும்தானே அமைய இருக்கிறது.
நிலமோ, குடியிருப்போ போகாது துறைமுகம் அமைக்கும் தொழில்நுட்பம் ஏதாவது இருக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்ற கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.