தமிழிசை பதவிக்கு ஆபத்தா.. எஸ்.வி.சேகர் ஏன் அப்படி கூறினார்.. என்ன நடக்கிறது பாஜகவில்?
தமிழிசை சவுந்தராஜனின் தலைமை பதவி மீது தற்போது கேள்வி எழுந்துள்ளது
Recommended Video
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பதவிக்கு எத்தனை பேருக்குதான் ஆசை?? பாஜக தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால், அதனை ஏற்கத்தயாராக இருப்பதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர் இப்படி அறிவிக்க என்ன காரணம் என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது. பாஜக மாநில தலைவர்களிலேயே ஒரே பெண் தமிழிசை மட்டும்தான். பாஜகவுக்கு எப்போதுமே ஒரு முகமூடி தேவைப்படுகிறது. அது தன் நிஜமுகத்தை என்றுமே நேராக காட்டியதில்லை.
தமிழிசை பாரம்பரியம்
தமிழிசைக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. படித்தவர், அதிலும் மருத்துவர். எந்த இடத்திலும் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கும் போக்கை உடையவர். இதைதான் மத்திய பாஜக சரியாக பயன்படுத்தி கொண்டது. மக்களிடம் பிரபலமும், மரியாதையும் பெற்றவரை முன்னிறுத்தியே தங்களை காரியங்களை சாதித்து கொள்வதேயே வழக்கமாக வைத்துள்ளது.
அத்வானி, ஜோஷி
அன்றைய மத்திய ஆட்சியில் வாஜ்பாய் என்ற வெள்ளை மனம் படைத்தவரின் முகம் மக்கள்முன் காட்டப்பட்டது என்றாலும், அவருக்கு பின்னே அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் முகங்கள் மறைந்திருந்ததே உண்மை. அன்றைய வாஜ்பாய்க்கு வந்த அதேநிலைதான் இன்று தமிழிசைக்கும் வந்துள்ளது. மாநில பொறுப்பை ஏற்று தமிழிசை 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் பாஜக தலைமையோ தமிழிசை மீது அதிருப்தியாக இருப்பதாக செய்திகள் வந்தன.
வீழ்ச்சிக்கு காரணம்?
தமிழிசை மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட முக்கிய காரணம், மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி திருப்திகரமாக இல்லை என கூறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே இதற்கு தமிழிசை காரணம் இல்லை என்பது பாஜக தலைமைக்கு இப்போது வரை புரியவில்லை. மத, இனவாத செயல்பாடுகள், சிறுபான்மை மக்களை கையாளும் விதம், நீட் தேர்வு உள்ளிட்ட எவ்வளவோ காரணங்களே தமிழகத்தில் பாஜக வீழ்ச்சியடைய காரணமாயிற்று. அதனால்தான் நோட்டாவை கூட தாண்ட முடியாத நிலை ஏற்பட்டது.
கல்லடி பட்ட மரம்
இதனால்தான் தமிழிசை கல்லடி பட்ட மரமாய் ஆகி போனார். மற்றொரு புறம், சுப்பிரமணியசாமி, எச்.ராஜா போன்று பலமான ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை என்ற காரணத்தினால், அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளானார். எனினும் அவரது பதவிக்கு போட்டிகள் பலமாக எழுந்தன. அதனால் மாநில பதவி பறிக்கப்பட்டு விடும் என்று பலமுறை பேச்சு வந்து போனது. இன்னும் சொல்லப்போனால் தமிழிசை பதவிக்கு எச்.ராஜா பெயர்கூட ஒருமுறை அடிபட்டது.
காணாமல் போயிருக்கும்
ஆனால் உண்மை என்னவென்றால், சுப்பிரமணியசாமி, எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் போன்றோர் பாஜக மாநில தலைவர்களாக பதவி வகித்திருந்தால் பாஜக தமிழகத்தில் என்றோ காணாமல் போயிருக்கும். அதே நிலைமைதான் எஸ்.வி.சேகர் இந்த பொறுப்புக்கு வந்தாலும் ஏற்படும். ஏனெனில் பிரதமர் மோடி மீது அதிக பாசமும், வெறித்தனமான பக்தியையும் வைத்திருப்பவர் எஸ்.வி.சேகர். பாஜகவிற்கு இவர் வந்தது மோடிக்காகத்தான். அதனால்தான் சென்ற முறை வாரணாசிக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு வந்தார்.
ஓட்டு வங்கி
மோடிக்கும் எஸ்.வி.சேகர் மீது ஒரு பிடிப்பு உள்ளது என்பதும் இதுவரை அவரை கைது செய்யாமல் இருப்பதிலேயே தெளிவாக தெரிகிறது. இந்த தைரியம்தான், தமிழக பாஜக தலைமையை அசைத்து பார்க்க தூண்டி உள்ளது. மேலும் தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய ஓட்டு வங்கியை கூறி தமிழிசையை பலவீனப்படுத்தும் துணிச்சலையும் தந்துள்ளது.
ஆதரவு கிடைக்குமா?
இதுநாள் வரை அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று ஒவ்வொரு கட்சிக்கும் தாம் சென்றுவிட்டு வந்தோமே, பெண்களை அவதூறாக பேசி தமிழக மக்களிடம் வறுபட்டு கிடக்கிறோமே, கோர்ட் கேஸ் என்று இப்போதுவரை படி ஏறிக் கொண்டு இருக்கிறோமே, தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி தொடர்ந்து ஏற்பட்டு வருகிறதே, நாம் தலைமை பொறுப்பை ஏற்றால் ஏற்பார்களா, முழு ஆதரவு மக்களிடம் கிடைக்குமா என்றெல்லாம் எஸ்.வி.சேகர் உளமாற யோசித்தாரா இல்லையா என தெரியவில்லை.
சகிப்புத்தன்மை
உண்மையிலேயே எஸ்.வி,சேகர் விரும்புவது போலவோ, அல்லது எச்.ராஜா விரும்புவது போலவே மாநில தலைமை பதவியை கொடுத்து பார்த்தால்தான் நிஜமான லட்சணம் என்ன என்று மத்திய பாஜகவுக்கு புரிய வரும். அதேபோல, பாஜக தலைமை மீது ஆயிரம் வெறுப்பு கொண்டாலும் அதை தமிழிசையிடம் காட்ட மனமில்லாமல் தமிழக மக்கள் இந்த நான்கரை வருட காலம் அவரை சகிப்புத்தன்மையுடன் அரவணைத்து கூட்டி சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் புரியவரும்.
தாமரை மலர்ந்தே தீரும்
இதற்காகவே எஸ்.வி.சேகர் அல்லது எச்.ராஜா மாநில தலைமை பொறுப்பை ஏற்றே ஆக வேண்டும். தலைமை பதவி யாருக்கு போனாலும் சரி, "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற தமிழிசையின் உறுதிபிடிப்பு மிக்க வரிகளை மட்டும் தமிழக மக்களால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.