பராமரிப்பு இல்லாத தடுப்பு.. வீணாகும் தண்ணீர்.. தூத்துக்குடியில் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!
தூத்துக்குடி கோரம்பள்ளம் பெட்டை குளத்தில், பழுதான தடுப்பில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடி கோரம்பள்ளம் பெட்டை குளத்தில், பழுதான தடுப்பில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம், கோரம்பள்ளம், பெரிய நாயகபுரம், சிறுபாடு, வீரநாயக்கந்தட்டு, பொட்டல்காடு, அய்யனடைப்பு, காலங்கரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் உள்ள நிலங்களில் வாழை, நெல், உளுந்து பயிரிடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வைகுண்டம், பேய்க்குளம் வழியாக இந்த பகுதிகளில் உள்ள பெட்டை குளத்திற்கு வந்து சேரும்.
ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் கடந்து மாதம் பெய்த மழை நீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாததோடு உபரிநீராக வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.
மேலும் பெருக்கெடுத்த மழை நீரின் ஒரு பகுதி வீணாக கடலில் கலந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பெட்டை குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படாததால் விவசாயம் பாதிக்கும் சூழல் உருவானது. இதில் குறைந்த அளவில் வந்த தண்ணீரை கொண்டு ஒரு சிலர் விவசாயத்தை தொடர்ந்தாலும், பெரும்பாலோனோர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
இதனிடையே பெட்டை குளத்தில் உள்ள தடுப்பு முறையான பராமரிப்பின்றி துருப்பிடித்ததோடு அதில் உருவான துளைகள் வழியாக தினமும் அதிக அளவிலான தண்ணீர் வீணாக வெளியேறி செல்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அதிகாரிகளோ தூக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.