மாணவிக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர்களை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை- மாவட்ட நீதிபதி தகவல்
திருவண்ணாமலை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர்கள் தங்கப்பாண்டியன், புனிதா, மைதிலி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள வேளாண் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாணவி பேராசிரியர்கள் மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகள் 40 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகார் கடிதம் மற்றும் நீதிபதியின் விசாரணை அறிக்கை எஸ்.பி. அலுவலகத்தில் இன்று கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகார் கூறிய பேராசிரியர் தங்க பாண்டியன், பேராசிரியைகள் புனிதா, மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார் அவர்.