தயாரிப்பாளர் சங்க வழக்குகள்... ஆறு ஆண்டுகளில் ரூ 7 கோடி விரயம்!
கடந்த ஆறு ஆண்டுகளில் தயாரிப்பாளர் சங்கத்தின் வழக்குகளுக்கு மட்டுமே ரூ 7 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளதாக ஏஎல் அழகப்பன் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வருகிற ஜனவரி 25-ந் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் தாணு தலைமையிலான ஒரு அணியும், ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான ஒரு அணியும், மன்சூர் அலிகான் தலைமையிலான மூன்றாவது அணியும், அணிகளில் இல்லாத சிலரும் போட்டியிடுகின்றனர்.
நேற்று தி நகரில் ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான அணியின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு ஏ.எல்.அழகப்பன் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
மேலும், துணைத்தலைவர் பதவிக்கு கே.ராஜன், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கே.பாலு, எம்.வி.கோபால்ராம், ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகர், கே.காளிதாஸ், ஆர்.கிஷோர் குமார், சுரேஷ் காமாட்சி, ஜி.கிச்சா, எஸ்.முத்துச்சாமி, எம்.ஏ.நேருஎட்வின்ராஜ், பியாரிலால் குண்டச்சா, கே.ரகுநாதன், ஜே.வி.ருக்மாங்கதன், எஸ்.வி.சேகர், வி.சுந்தர், கே.சுரேஷ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.வடிவேல், கே.விஜயகுமார், எஸ்.கே.விஜயன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில்,
* திருட்டு டிவிடி, விசிடி பிரச்சினையை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நிவாரணம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* தயாரிப்பாளர் சங்கமே ஏற்பாடு செய்து டிஜிட்டல் (Qube. UFO, PXD) திரையிட்டு அதற்கான செலவினங்கள் போக மீதமுள்ள தொகை கணக்கிட்டு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யும். இதுகுறித்து உடனடியாக திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி மேற்கண்ட முடிவுகளை செயல்படுத்துவோம்.
* பல தயாரிப்பாளர்கள் எடுத்து முடித்து சென்சார் செய்யப்பட்டு வெளியிட முடியாமல் உள்ள திரைப்படங்களை சங்கம் முயற்சி செய்து வெளியிட ஆவன செய்ய வேண்டும்.
* கேபிள் டிவி மூலம் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் கணிசமான தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
* முக்கியமான முடிவுகளை சங்கம் எடுக்கும்போது சிறப்பு அழைப்பாளர்களையும் முன்னாள் சங்க நிர்வாகிகள் தலைவர், செயலாளர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் முடிவெடுக்கப்படும்.
என்பன உள்ளிட்ட 21 தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
பின்னர், 'கடந்த மூன்று முறை தேர்தல் முடிந்த பிறகும் பதவிக்கு வந்த நிர்வாகிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு சங்கம் முடங்கிப் போனது. இந்த முறையும் அப்படி நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?' என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.
அதற்கு ஏஎல் அழகப்பன் பதிலளிக்கையில், "தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் எங்கள் அணியில் உள்ள யாரும் நீதி மன்றத்துக்குப் போக மாட்டோம். கடந்த மூன்று தேர்தல் முடிவுகளையும் எதிர்த்து நீதிமன்றம் போய் ஆறு ஆண்டுகள் வழக்கு நடத்தியதில் சங்கத்துக்கு ரூ 7 கோடி வரை செலவாகியுள்ளது. இது தவிர தனிப்பட்ட முறையில் பலர் செலவழித்துள்ளனர். தேர்தலுக்காக நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு ரூ 5 லட்சம் மாதச் சம்பளம் தரவேண்டியிருந்தது. காரணம் நீதிமன்ற வழக்குகள். இனி அப்படி ஒரு நிலை எங்களால் வராது," என்றார்.