விஷாலுக்கு கடும் எதிர்ப்பு... தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு பாதியிலேயே நிறுத்தம்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் அந்த கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் விஷால் தரப்பினருக்கும், சேரன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததால் அந்த கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக அறிவித்தார்.
விஷாலுக்கு கடும் எதிர்ப்பு... தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு பாதியிலேயே நிறுத்தம்
— Oneindia Tamil (@thatsTamil) December 10, 2017
Read more at: https://t.co/UCyMZxN9Fv #ProducersCouncil pic.twitter.com/TplXFITy11
அவர் அறிவித்த நாள் முதல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்குமாறு சேரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை பொருட்படுத்தாமல் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். எனினும் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சேரன் தரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10.30 தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. எனினும் 12 மணிக்கே அந்த கூட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிட முடிவு செய்தது குறித்து விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் சிலருக்கு மைக் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் சேரன் தரப்பினருக்கும், விஷால் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சேரன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்ததால் இதையடுத்து கூட்டம் நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.