வர்தா புயல் பாதிப்பு சீரானது.. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. முதலாவது யூனிட்டில் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தற்போது மீண்டும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அணுமின் நிலையத்தின் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த 12ஆம் தேதி கரையை கடந்த வர்தா புயலால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகரே சின்னாபின்னமானது.
மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகினர். வர்தா புயல் புரட்டிப்போட்ட சென்னையின் பல பகுதிகளில் தற்போதுதான் இயல்பு நிலை மெதுவாக திரும்புகிறது.
வர்தா புயலின் பாதிப்பில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையமும் தப்பவில்லை. இதனால் 2 யூனிட்டுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 440 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி நிறுத்தபபட்டிருந்தது.
இந்நிலையில் கல்பாக்கத்தின் முதலாவது அலகு சீர் செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 2வது யூனிட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கோளாறு சரி செய்யப்பட்ட பின் இங்கும் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.