இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காயிதே மில்லத்துக்குப் பிறகு இப்பதவிக்கு வரும் முதல் தமிழக முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இ.அகமது இருந்து வந்தார். சமீபத்தில் அவர் மரணமடைந்தார். இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதில் தலைவராக பேராசிரியர் காதர் மொகதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். மாநிலத் தலைவராகவும் இருந்து வந்தார்.
தேசிய பொதுச்செயலாளராக பி.கே.குஞ்ஞாலி குட்டி, தேசிய பொருளாளராக பி.வி. அப்துல் வஹாப் எம். பி., தேசிய அமைப்புச் செயலாளராக இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. ஆகியோர் இன்று சென்னையில் கூடிய தேசிய செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.
காயிதே மில்லத்திற்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிம் லீக்கின் தலைவராக இப்போது தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்.பி.
புதுக்கோட்டையில் பிறந்தவரான பேராசிரியர் காதர் மொகிதீன் வேலூர் லோக்சபா தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். மாணவப் பருவத்தில் காயிதே மில்லத்தால் ஈர்க்கப்பட்டு முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்தார். முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் அணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் சில காலம் பேராசிரியாக பணியாற்றியுள்ளார். பின்னர் சமூக மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதற்காக பேராசிரியர் பணியை உதறி விட்டு முழு நேர அரசியலுக்கு மாறினார்.
பலமுறை சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டாலும் அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததில்லை. மாறாக 2004ல் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.