திருவனந்தபுரம் அருகே கல்லூரி பேராசிரியர் குடும்பத்துடன் எரித்து கொலை - மகன் தலைமறைவு
திருவனந்தபுரம் அருகே ஓய்வுபெற்ற பேராசிரியர் குடும்பத்தோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மகன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் ராஜ தங்கம், அவரது மனைவி மற்றும் மகள் உள்பட 4 பேரை எரித்துக்கொன்றுவிட்டு அவரது மகன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்து விட்டு மகன் ஜீன்சன் ராஜா குமரி மாவட்டத்திற்கு தப்பியதாக கேரளா போலீசார் குமரியில் தேடி வருகின்றனர்.
திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ தங்கம். குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜீன்பத்மா. ஓய்வுபெற்ற அரசு டாக்டர். இவர்களது மகன் கேடல் ஜீன்சன் ராஜா. ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். மகள் கரோலின் சீனாவில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். கேடல் ஜீன்சன் ராஜாவும், கரோலினும் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தனர்.
ஞாயிறன்று காலை ராஜ தங்கத்தின் வீட்டில் இருந்து அதிகஅளவில் புகை வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைதொடர்ந்து ஏடிஜிபி சந்தியா, ஐஜி மனோஜ் ஆபிரகாம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டிற்குள் ராஜதங்கம், ஜீன்பத்மா, கரோலின் ஆகியோர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர். ஜீன்பத்மாவின் சகோதரி லலிதா வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தார். இவர்களது உடல்கள் அருகே கேடல் ஜீன்சன் ராஜா போன்ற தோற்றமுடைய பொம்மை கிடந்தது. எனவே ஜீன்சன் ராஜா இக்கொலைகளை செய்து விட்டு தானும் இறந்து விட்டதாக போலீசாரை நம்ப வைக்க தனது உருவ பொம்மையை அப்பகுதியில் விட்டு சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை.
சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி மனோஜ் ஆபிரகாம், ராஜதங்கம், அவரது மனைவி, மகள், லலிதா ஆகியோர் இறந்து 2 முதல் 3 நாட்கள் வரை ஆகியிருக்கலாம். கடந்த 3 தினங்களாக இவர்களை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
3 நாட்களாக அவரது மகன் ஜீன்சன் ராஜா மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் பக்கத்து வீட்டார் விசாரித்து இருக்கின்றனர்.அப்போது அனைவரும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரையும் 4 தினங்களுக்கு முன்பே கொன்று விட்டு ஒரு போர்வையில் சுற்றி எரித்துள்ளார் ஜீன்சன் ராஜா.
நேற்று காலை ராஜதங்கம் வீட்டில் இருந்து புகை வந்தபோது, பின்புற சுவர் ஏறி குதித்து ஒருவர் தப்பி ஓடியதை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர்.
தப்பி ஓடியது கேடல் ஜீன்சன் ராஜாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர்தான் கொலையை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
தாய் தந்தை, சகோதரியை எரித்து கொன்று விட்டு ஜீன்சன் ராஜா குமரி மாவட்டத்திற்கு அவர் வந்து இருக்கலாம் எனக்கருதி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்