ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம்... பேராசிரியர் ஜெயராமன் கைது
திருவாரூர்: திருவாரூர் அருகே கடம்பக்குடியில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்த வந்த பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் பெருந்தரகுடி ஊராட்சிக்குட்பட்ட கடம்பக்குடி கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், கடந்த 2016-ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்தக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களின் எதிர்ப்பால், ஓஎன்ஜிசி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், அந்நிறுவனம் பணிகளை தொடர்ந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கெனவே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்த வந்த போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.