அருப்புக்கோட்டை நிர்மலாதேவிக்கு துணிச்சல் தந்த கருப்பு ஆடுகள் யார்? எங்கே? எப்போது பிடிபடும்
அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் இன்னும் என்னென்ன அவலங்களையெல்லாம் பாக்க வேண்டும் என தலையெழுத்தோ தெரியவில்லை. பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.
இன்றைய உலகம் நன்மைகளால் மட்டும் நிரம்பியிருக்கவில்லை. தீமைகளும் சரிக்கு சரியாகவே இருக்கின்றன. அதிலிருந்து போராடி மீள்கிறோமா அல்லது அதிலேயே மிதிபட்டு, உதைபட்டு சாகிறோமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
30 வருடங்களுக்கு முன்பிருந்த ஆசிரியைகள் மாணவர்களுக்கு அன்பை போதித்தார்கள். வாழ்வியலை புரிய வைத்தார்கள். நீதிபோதனை போன்ற வகுப்புகளில் கற்பனை கதைகளை கூறி மனதை பக்குவப்படுத்தினார்கள். கண்டிப்புடன் கூடிய பாசத்தை பதிய வைத்து மற்றொரு அம்மாவாக வகுப்புகளில் உருமாறி நின்றார்கள். அதனால்தான், பள்ளிபடிப்பு முடிந்து நெடுங்காலம் கடந்தாலும் அத்தகைய ஆசிரியைகள் நம் மனதை விட்டு அகலாமல் இன்னும் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சுகபோகத்தில் நாட்டமா?
இன்றைய ஆசிரியைகள் சிலருக்கு இதயம் இவ்வளவு கெட்டித்துப்போக காரணம் என்ன? இரக்கமற்ற மனசுக்கும் - துணிச்சலான செயல்களுக்கும் காரணமாக இருப்பவை எவை? வேறென்ன?? தன்னை சுற்றிலும் சுயநலம், சுகபோகத்தில் நாட்டம், உழைக்காமல் பணம் திரட்ட வேண்டும் என்ற பேராசை, அதற்காக தகுதி, வயது, தராதரம், மனசாட்சி போன்றவற்றை எல்லாம் வழியனுப்பி வைத்து இப்படி ஒரு கேடு கெட்ட செயலை செய்ய வைத்திருக்கிறது.
நிர்மலா... ஒரு அம்புதான்
நிர்மலா விவகாரம் ஏதோ ஒரு கல்லூரியில், ஏதோ ஒரு பேராசிரியை செய்த காரியம் என்று நினைத்துவிட முடியாது. பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவிகள் அல்லது, அதிக மதிப்பெண்ணுக்கு ஆசைப்படும் மாணவிகளை இதுபோன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது நமக்கு கிடைத்திருப்பது நிர்மலா என்ற ஒரே அம்புதான். உயர்ரக பசுந்தோல் புலிகள் ஏராளமானோர் எய்தவர்களாக திரைமறைவில் பதுங்கி உள்ளனர்.
தனி விசாரணை ஏன்?
காவிரி, ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களை மறக்கடிப்பதற்காகவே பேராசிரியை விவகாரம் வெளிக்கொணரப்படுவதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் ஆளுநர் மீதுள்ள அதிருப்தி காரணமாக இந்த விவகாரத்தில் ஆளுநர் பெயரை சில உயரதிகாரிகள் சிக்க வைக்க முயலுவதாகவும், ஆனால் ஆளுநரோ, அத்தகைய சிக்கலுக்கு இடம்கொடுக்காமல் முந்தி கொண்டு தனி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆளுநருக்கு ஏன் இவ்வளவு அவசரம்? ஏன் இவ்வளவு அக்கறை? தன் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறை என்பது மட்டும்தான் காரணமாக? அல்லது வேறெதுவும் உள்நோக்கமா?
தனிமனித ஒழுக்கம் தேவை
இதில் பரிதாபத்துக்குரியவர்கள் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும்தான். இதில் தனிப்பட்ட முறையில் ஒரு பாதிப்பு என்றால் சிலர் அதற்கு பலியாகிவிடுகின்றனர். ஒருசிலரோ சாதுர்யமாக சமாளித்து தப்பி வெளிவருகிறார்கள். பேராசிரியை நிர்மலா சம்பவமும் அப்படித்தான் மாணவிகள் வெளிஉலகத்துக்கு கொண்டு வந்தனர். ஈவ்டீசிங், வன்கொடுமை போன்ற சட்டங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்தாலும்கூட, பெண்களுக்கு ஒழுக்கமும், தனிமனித பாதுகாப்பும், கண்டிப்புடன்கூடிய அணுகுமுறையும் இருந்தாலே பெரும்பாலான இடர்களிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
பாதுகாப்பு தேவை
பணத்திற்கும், மதிப்பெண்ணுக்கும், ஆசைக்கும் விலைபோகாத அந்த 4 மாணவிகளுக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அந்த மாணவிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டுமே என்ற கவலையும் வந்து ஒட்டிக் கொள்கிறது. உண்மையை அம்பலப்படுத்திய 4 மாணவிகளுக்கான பாதுகாப்பை தமிழக அரசு தாமதிக்காமல் வழங்க வேண்டும்.
கருப்பு ஆடுகள் யார்?
8 வயது சிறுமி ஆசிபா படுகொலையால் நாடே கொந்தளிந்து கிடக்கும்போது, ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு முக்கியமாக பேராசிரியையாக இருந்துகொண்டு இப்படி மாணவிகளுக்கு எதிரான ஒரு கீழ்த்தரமான செயலை செய்ய இவருக்கு எப்படி மனம் வந்திருக்கும்? இத்தகைய துணிச்சலை பேராசிரியருக்கு கொடுத்த கருப்பு ஆடுகள் யார் யார்? பேராசிரியரின் இந்த நரித்தனமான செயல், சேவையாக நினைத்து தன்னையே அர்ப்பணித்து கல்வி புகட்டும் மற்ற பேராசியர்களுக்கும் களங்கத்தை உண்டாக்காதா?
மூளைச்சலவை பட்டமா?
4 மாணவிகளிடம் பேசிய அதே வக்கிர பேச்சினை, பேராசிரியர் நிர்மலா தன்னுடைய இரு மகள்களிடமும் பேச மனம் வருமா? பேராசிரியர் நிர்மலா தான் வாங்கி குவித்து வைத்திருக்கும் பட்டங்களெல்லாம் முறைப்படி படித்துதான் வாங்கினாரா? அல்லது அவரும் தன் கல்லூரி காலத்தில் பிற பேராசிரியரால் மூளைசலவை செய்யப்பட்டாரா என சந்தேகம் எழுகிறது.
எல்லாம் கண்துடைப்பு
திருடன் கையில் சாவியை கொடுப்பது போன்றதுதானே ஆளுநர் அமைத்த விசாரணை குழுவும். சிபிசிஐடி விசாரணை மாநில அரசின் கீழ் வருவது. ஆளுநரையோ, அல்லது ஆளுநரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் உயரதிகாரிகளையோ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சிபிசிஐடி முயற்சி மேற்கொள்ளுமா? சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு கூறுகிறது. சிபிஐ, சிபிசிஐடி, தனிவிசாரணை.... இதெல்லாம் சுத்த மேல்பூச்சு செயல். இதனால் எந்த ஒரு பிரயோஜனமும் ஏற்படபோவதில்லை என்பதை தமிழக மக்கள் நிறைய சம்பவங்களில் பார்த்து அலுத்து வெறுப்பின் உச்சநிலைக்கு எப்போதோ வந்துவிட்டார்கள்.
போர்க்குணம் அவசியம்
இந்த விவகாரம் முழுக்க, முழுக்க இரும்புத்திரைக்கு பின்னால் நடைபெற்ற ஒரு அழுக்கு அரங்கேற்றம். தமிழகத்துக்கு வரும் இதுபோன்ற சாபக்கேட்டையெல்லாம் சகிப்புத்தன்மையோடும், சாதுர்யம் கலந்த போர்க்குணத்தோடும் மக்களை திரட்டி விழிப்படைய செய்வதுதான் இதற்குரிய ஒரே தீர்வு. இல்லையென்றால் இந்தியா எனும் பழமையும் பண்பாடும் மிக்க தேசமும் நாசமாக போய்விடும். நாடு பாதுகாக்கும் என்று நம்பி உட்கார்ந்து கொண்டிருந்தால் நம் வீட்டு பெண் பிள்ளைகளை நாம் இழந்து நடுத்தெருவில்தான் நிற்கவேண்டிய நிலைதான் ஏற்படும்.