பாலியல் சர்ச்சை பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் : அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உதவிப் பேராசிரியர் முருகன் ஜாமீன் மனு தள்ளிவைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியது தொடர்பான வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஆளுநர் ஒரு குழுவை நியமித்தார்.
நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
முருகனின் ஜாமீன் மனுவை 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.