பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தேவை- கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை என்று கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை வைத்துள்ளது.
Recommended Video
அருப்புக்கோட்டை: மாணவிகளிடம் தவறான முறையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி குறித்து ஆளுநர் அமைத்துள்ள விசாரணைக் குழு மீது நம்பிக்கை இல்லை எனவும், சிபிசிஐடி விசாரணை தேவை என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்து உள்ளார்.
உயர்மட்டக்குழு விசாரணை
அந்த விசாரணைக்குழு இன்று விசாரணையை துவக்கி உள்ளது. இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி அந்த மாணவிகளிடம் பேசிய ஆடியோவில், உயர் அதிகாரிகள், ஆளுநர் மாளிகை வரை தனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறி உள்ளதால், அவர்கள் அமைத்த விசாரணைக்குழுவின் விசாரணையின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்தது.
கூட்டு நடவடிக்கைக் குழு
இதுதொடர்பாக, விசாரணைக்குழு மீது நம்பிக்கை இல்லை என்றும், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை வைத்துள்ளது.
கலங்கம் துடைக்கப்படுமா?
மேலும், இந்த குழு ஒரு கண் துடைப்பு நடவடிக்கை என்றும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அல்லாத குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் மீது ஏற்பட்டுள்ள கலங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சிபிசிஐடி விசாரணை தேவை
இதனிடையே நிர்மலா தேவியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் அமைத்துள்ள விசாரணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.