'அந்த' மூவர் மட்டும்தான் குற்றவாளியா?! நீர்த்துப் போகும் நிர்மலா தேவி வழக்கு
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருடன் முடிவுக்கு கொண்டு வரும் வேலைகள் நடக்கிறதாம்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கணித பேராசிரியை நிர்மலா தேவி வழக்கைக் கிடப்பில் போடும் வேலைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் பேராசிரியர்கள் சிலர். 'முருகன் மற்றும் கருப்பசாமியோடு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டோம்' என்கின்றனர் பல்கலைக்கழக போராட்டக் குழுவினர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் உள்ள தேவாங்கர் கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் வகையில் வலை விரித்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பெயரும் அடிபட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
கமிஷனின் பணியும் நிறைவு
நிர்மலா தேவி, முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, தேவாங்கர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் எனப் பலரிடமும் விசாரணை நடத்தினார் சந்தானம். இந்த கமிஷனின் பணியும் நிறைவடைந்துவிட்டது. தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்னமும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கிறார் நிர்மலா தேவி.
ஜாமீன் கேட்டு மனு
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்கு வந்த இந்த மனுவை வரும் ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார் நீதிபதி லியாகத் அலி.
கல்லூரிகளுக்கு இடமாற்றம்
இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும்' எனத் தொடக்கம் முதலே போராடி வருகிறது மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய போராட்டக் குழு. துணைவேந்தர் செல்லத்துரை மீதே இவர்களில் சிலர் சந்தேகம் எழுப்பியதால், அவர்களை வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்துவிட்டனர்.
விசாரணை முடித்துக் கொள்ள திட்டம்
தொடர்ந்து இந்தக் குழுவினர் போராடி வருகின்றனர். நம்மிடம் பேசிய போராட்டக் குழுவின் நிர்வாகி ஒருவர், ஆளுநர் நியமித்த விசாரணையும் அரசு நியமித்த விசாரணையும் சரியான கோணத்தில் செல்லவில்லை என்பது எங்கள் கருத்து. இரண்டு விசாரணையிலும் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரோடு மட்டுமே விசாரணையை முடித்துக் கொள்ளும் வேலைகள் நடந்து வருகின்றன.
மூவர் மட்டுமே செய்த தவறு
பல்கலைக்கழக விருந்தினர் இல்லம், தொலைதூரக் கல்வி மைய பேராசிரியர்களின் தொடர்பு, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் தொடர்புகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்திருக்க வேண்டும். இவர்களது செல்போன்களை ஆராய்ந்திருந்தாலே அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கும். அப்படிச் செய்தால் உயர்கல்வித்துறையின் மேல்மட்டம் வரையில் சிலர் சிக்குவார்கள் என்பதால், ' இது மூவர் மட்டுமே செய்த தவறு, வேறு யாருக்கும் தொடர்பில்லை' என்பது போல வழக்கை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். வழக்கைக் கிடப்பில் போடும் வேலைகள் நடந்தால், அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.