”என்னுடன் ஒருநாள் செலவழித்தால் உடனே உனக்கு பட்டம்” - பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர்
கோவை: பாரதியார் பல்கலை கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் பட்டம் வழங்குவதற்காக பாலியல் தொல்லை கொடுப்பதாக கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கோவை சித்தாபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பாரதியார் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். அந்த பல்கலை கழகத்தில் ஆங்கில மொழியியல் மற்றும் இலக்கியவியல் துறையின் தலைவராகவும், சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்கும் பேராசிரியர் சரவண செல்வன் தன்னுடன் ஒருநாள் தங்கினால் தான் முனைவர் பட்டம் பெற முடியும் என்று மிரட்டுவதாக மாணவி புகார் கூறியுள்ளார்.
சரவண செல்வன் மீது பல்கலை கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தரிடம் புகார் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட மற்றொரு சிண்டிகேட் உறுப்பினரான ஜெயக்குமார் தம்மை ஒத்துழைத்து போகும்படி அறிவுறுத்தியதாக மாணவி கூறியுள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு பேராசிரியர் சரவண செல்வன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவி கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மாணவி புகார் மனு அளித்துள்ளார்.