அண்ணாமலைப் பல்கலை துணை வேந்தர் - பேராசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு: பரபரப்பு - போலீஸ் குவிப்பு !
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணை வேந்தருக்கும் பேராசிரியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்கலைக் கழக மானியக் குழு விதிப்படி இவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தவோ, தேர்வுக்கான விடைத்தாள்களையோ திருத்த அனுமதியில்லை.
இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கும் மணியன் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் சிலரை பாடம் நடத்தவும், தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தவும் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், துணை வேந்தரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அலுவலத்தின் உள்ளே இருந்த மணியன் வெளியே வரும்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை கூறியுள்ளனர். அதற்கு எந்த பதிலும் தராததால் துணை வேந்தர் - பேராசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. சுந்தரவடிவேலு, சிதம்பரம் காவல்நிலைய ஆய்வாளர் குமார், அண்ணாமலை நகர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.