காவல்துறை அதிகாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வு.. அப்பல்லோவில் இருந்து வெளியாகலாம் அதிரடி முடிவு!
நிலுவையிலுள்ள காவல்துறை பதவி உயர்வு விவகாரத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக காவல்துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வுகள் , நீண்ட வருடங்களாக நிலுவையில் உள்ளன. உடல்நலம் சார்ந்த பிரச்சனையாலும் உயர் அதிகாரிகளிடையே இருந்த சிபாரிசு பிரச்சினைகளாலும் இதில் முடிவெடுக்காமல் அந்த ஃபைல்களை கிடப்பில் போட்டிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இப்போது அப்பல்லோவில் அவர் 2 மாதங்களை நெருங்குகிறது. ஜெயலலிதா உடல் நிலை மோசமாக இருந்ததால் காவல்துறை பதவி உயர்வு குறித்து இதுவரை யாரும் வாய்த்திறக்கவில்லை. ஆனால், மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதா வீடு திரும்பினாலும் அவரால் பழையபடி தெம்பாக செயல்பட முடியாது என நம்பும் காவல்துறையினர் , தங்களின் பதவி உயர்வுகள் குறித்து டி.ஜி.பி.யிடம் முறையிட்டுள்ளனர்.
டி.ஜி.பி இதுகுறித்து தலைமைசெயலரிடம் விவாதித்துள்ளார். தலைமை செயலாளரும் உடனே இது குறித்து கவனம் செலுத்துமாறு உள்துறை செயலர் அபூர்வவர்மாவை கேட்டுக்கொள்ள, அபூர்வ வர்மாவோ, முதல்வரின் செயலர் வெங்கட்ரமணனிடமும் முன்னாள் டி.ஜி.பி.ராமானுஜத்திடமும் சொல்லியுள்ளார்.
அவர்களோ, தலைமைச் செயலாளார் மீதுள்ள கோபத்தில், "அதெல்லாம் வேண்டாம். அமைதியா இருங்க" என உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனால் எரிச்சலடைந்த தலைமை செயலாளர், விஷயத்தை ஏன் அவர்களிடம் கொண்டு சென்றீர்கள் என, அபூர்வ வர்மாவை கண்டித்தாராம். அத்துடன் இதனை சசிகலாவின் கவனத்துக்கு தலைமைச் செயலாளர் . கொண்டு சென்றுள்ளார். பதவி உயர்வு குறித்து ஃபைல் விவகாரத்தில் சில உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். விரைவில் பதவி உயர்வுகள் கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறார்கள் காவல் துறையினர்.