சசிபெருமாள் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், தீடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிரிழந்தது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிபெருமாளின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், "சசிபெருமாளின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. போராட்டம் நடத்திய சசிபெருமாளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.
5 மணிநேரம் சசிபெருமாள் டவர் மீது போராடியது அரசுக்கு எப்படித் தெரியாமல் போனது. தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதையே இது காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.