நான் ஒரு ராசியில்லாத ராஜா... புலம்பும் 'சிதம்பரம்' மணிரத்னம்!!
சென்னை: நான் ஒரு ராசியில்லாத ராஜா என்ற வரிகள் மிகச் சரியாக பொருந்தக் கூடிய நபராக இருப்பவர் சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட மணிரத்னம்தான்..
காங்கிரஸ் கட்சியில் இருந்த மணிரத்னம், கடந்த 3 ஆண்டுகாலமாக சிதம்பரம் தொகுதியை எப்படியும் லோக்சபா தேர்தலில் பெற்றுவிடுவது என்று களப் பணிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் மணிரத்னத்துக்கு நோ சொல்லிவிட்டு வள்ளல் பெருமானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாளை படைதிரட்டி சென்னை வந்தார். காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடச் செய்து தீக்குளிப்பு மிரட்டல் எல்லாம் விடுக்கச் செய்தார் மணிரத்னம்.
வளைத்த பாமக
ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. விரக்தியில் கிடந்த மணிரத்னத்தை வளைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. தாம் பாமகவில் சேரத் தயார்.. ஆனால் பாமகவிலாவது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனையும் போட்டார்.
திருமாவுக்கு எதிராக மணிரத்னம்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏற்கெனவே சிதம்பரம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் நடந்து வருகிறது. இருந்தாலும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை எதிர்கொள்ள வலுவான நபராக மணிரத்னத்தை கருதியது பா.ம.க.
பாமக வேட்பாளராக
இதனால் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்த உடனேயே அக்கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதில் தலைகால் புரியாமல் குதிக்கத் தொடங்கிவிட்டார் மணிரத்னம்.
மார்தட்டிய மணிரத்னம்
இந்தியாவிலேயே கட்சியில் சேர்ந்து 5 நிமிடத்தில் வேட்பாளரானவன் நான் மட்டுமே என்றெல்லாம் மார்தட்டிய கையோடு வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். அப்போது மாற்று வேட்பாளராக மனைவி சுதாவையும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்தார்.
ராசியே இல்லையே..
ஆனால் தேர்தலுக்கும் மணிரத்னத்துக்கும் எந்த ஒரு ராசியுமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு அவரது மனைவிதான் வேட்பாளர் என்று அறிவிக்க நேரிட்டது. மணிரத்னத்தின் வேட்புமனுவை 10 பேர் வழிமொழியாததாலே இந்த நிலைமை உருவானதாம்.
வேட்பாளரானார் மனைவி
இதனால் வேறுவழியே இல்லாமல் தமது மனைவியை வேட்பாளராக களமிறக்கி நொந்து போன மனநிலையோடு தேர்தலை எதிர்கொண்டு வருகிறார் அவர். மணிரத்னத்தின் மனைவி சுதா ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.. அவருக்காவது தேர்தல் ராசியானதுதானா என்பது மே 16-ந் தேதியன்று தெரிந்து விடும்.