கமிஷனர் ஜார்ஜ்க்காக மன்னிப்பு கேட்ட அரசு வக்கீல்.. ஆஜராவதாக கூறி விலக்கு பெற்றதால் கோர்ட் அதிருப்தி
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மன்னிப்பு கோரியுள்ளார். .
சென்னை: கமிஷனர் ஜார்ஜ்க்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மன்னிப்பு கோரியுள்ளார். நேரில் ஆஜராவதாக கூறி விலக்கு பெற்றதால் நீதிமன்றம் அதிப்ருதி தெரிவித்துள்ளது. தாமாக முன்வந்து ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலராக பதவி வகித்த அண்ணாமலை தனது சொத்து விவரங்களை மறைத்துவிட்டதாகவும், சொற்ப தொகையை வரியாக செலுத்தியதாகவும் கூறி ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பேரில் கவுன்சிலர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. இதையடுத்து காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
ஆஜராவார் என உறுதி
இந்த வழக்கில் ஆணையர் ஜார்ஜ் மார்ச் 22ஆம் தேதியான இன்று நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று ஜார்ஜ் நேரில் ஆஜராவார் என்று அரசு வக்கீல் உறுதியளித்தார்.
விலக்க பெற்ற ஜார்ஜ்
ஆனால் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி எஸ்.ஜார்ஜ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆணையர் எஸ்.ஜார்ஜ் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.
தாமாக வழக்குப்பதிவு செய்யமுடியும்
இந்நிலையில் அண்ணாமலையின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
உத்தரவாதத்தை நிறைவேற்றாதது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய முடியும்.
உத்தரவாதத்துக்குப் பின் ஏன் மேல்முறையீடு?
22ம் தேதி ஜார்ஜ் ஆஜராவார் என உத்தரவாதம் அளித்தீர்கள். பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தீர்கள். நேரில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்த பின்னர் மேல்முறையீடு செய்வது ஏன்?
மக்களின் வரிப்பணம் வீணாகிறது
ஒரு அதிகாரி நேரில் ஆஜராக அளித்த உத்தரவுக்கு மற்ற அதிகாரிகள் ஆஜராவது ஏன்? ஒருவருக்கு பதில் மற்றொருவர் ஆஜராவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
ஏன் வழக்கு தொடரக்கூடாது?
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். உறுதிமொழியை மீறியதால் ஜார்ஜ் மீது ஏன் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடரக்கூடாது? இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார்.
மன்னிப்பு கோரிய வக்கீல்
ஆஜராவதாக கூறி ஜார்ஜ் விலக்கு பெற்றதற்கு நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து அரசு வழக்கஞர் கமிஷனர் ஜார்ஜ்க்காக மன்னிப்பு கோரினார்.