பாலாற்றில் ஆந்திரா கட்டிய நீர்த்தேக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி: பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டிய நீர்த்தேக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வாணியம்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர், காஞ்சி, சென்னை மாவட்டங்களின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் வேட்டு வைக்கும் ஆந்திராவின் சட்ட விரோதத் பாலாற்றுப் புல்லூர் தடுப்பணையை அகற்று, தமிழர்களின் கனக நாச்சியம்மன் திருக்கோவிலை ஆந்திரா ஆக்கிரமிக்க அனுமதிக்காதே ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, வாணியம்பாடியில் "பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம்" சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி கனரா வங்கி அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் மு. சுரேசு தலைமை தாங்கினார். தெக்குப்பட்டு பாபு, வடக்குப்பட்டு பிரபு, புல்லூர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு. செம்பரிதி, கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேசியதாவது:
வெள்ளைக்காரனுக்கு நாம் அடிமையாக இருந்தபோதுகூட, தமிழ்நாட்டிற்கு ஆற்று நீர் உரிமைகள் இருந்தன. ஆனால், டெல்லிக் கொள்ளையர்களின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் சென்றபிறகு, நம் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டுள்ளது.
1892ஆம் ஆண்டு மைசூர் - சென்னை மாகாணம் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும் கர்நாடகமும் தொடர்ந்து மீறி வருகின்றனர். தமிழன் அழியட்டும் எனக் கருதுகின்ற இந்திய அரசு, இதை கண்டு கொள்வதே இல்லை.
ஆந்திரா கட்டியுள்ள தடுப்பணையைப் பார்வையிட நாங்கள் குழுவாகச் சென்றோம். அங்கு சென்ற பிறகே, அது வெறும் தடுப்பணை அல்ல, அதுவோரு நீர்த்தேக்கம் என்பதைப் புரிந்து கொண்டோம்.
எல்லோரும் அந்த தடுப்பணை 5 அடியிலிருந்து 12 அடி வரை உயர்த்தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! அங்கு, மிகப் பலமாக அஸ்திவாரம் போட்டு, 25 அடி உயரமும் 12 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட நீர்த்தேக்கத்தையே உருவாக்கியுள்ளனர்.
ஆந்திரப் பொதுப்பணித்துறையினர் அவ்வாறு செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
இப்போதுகூட, துப்பாக்கி ஏந்திய ஆந்திரக் காவல்துறையினர் - அதிரடிப்படையினர் நமது கனகநாச்சியம்மன் கோவிலில் இருந்த தமிழரான அர்ச்சகரை விரட்டிவிட்டு, அங்கு கடும் பாதுகாப்பைப் போட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு காவல்துறையினர் இதுவரை அங்கு வரவில்லை.
வெறும் கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கருதுகின்றார். அந்தக் கடிதம் எழுதுதல் என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே!
எனவே, உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பிரதமரை இந்த அணை சட்ட விரோதமான அணை என்று உண்மைகளைக் கூறி முறையிட வேண்டும். நம் பொதுப்பணித்துறையினரையும் தமிழ்நாடு காவல்துறையினரையும் இங்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும். கனகநாச்சியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினரை இருக்கும்படிச் செய்ய உத்தரவு பெற வேண்டும்"
இவ்வாறு பெ. மணியரசன் பேசினார்.
பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜமுனா தியாகராஜன், பாலாறு பாதுகாப்பு இயக்கம் ஆ.த. ஜமீன் சவுந்தர்ராஜன், மக்கள் சட்ட உரிமைகள் கழகச் செயலாளர் திருநாவுக்கரசு, தமிழ்த் தேச மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் செந்தமிழ்க்குமரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தூருவாசன், எக்லாஸ்புரம் ஊராட்சித் தலைவர் தேவ. சோழன், சமூக ஆர்வலர் அகஸ்டின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.