யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்த ஈசாவுக்கு எதிராக போராட்டம்- சமூக நீதிக்கட்சினர் கைது!!
கோவை: கோவை ஈசா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள யானைகள் வழித்தடங்களை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த மையத்தை முற்றுகையிட முயன்ற சமூக நீதிக்கட்சியினர் 30-பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை ஈசா யோகா மையம் இளைஞர்களை மூளை சலவை செய்வதாகவும், வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், ஈசா பள்ளியில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், வன நிலங்களை ஈசா யோகா மையம் ஆக்கிரிமித்துள்ளதால் யானைகள் வழிதடம் மறிக்கப்பட்டு அவை உயிரிழப்பதாக சமூக நீதிக்கட்சியினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக நேற்று ஈசா யோகா மையத்தை மையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த சமூக நீதிக்கட்சியினர் முயன்றனர்.
அப்போது, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு இந்த முற்றுகை போராட்டத்தை நடத்துகிறோம் என்றும், தற்போது ஈசா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள யானைகளின் வழித்தடங்களை மீட்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், ஈசா மையத்தின் மீதான புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் வலியுறுத்தினர். இதனிடையே, ஈசா யோகா மையத்தை மையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் செம்மேடு என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தலைமையில் ஈசா யோகா மையம் முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் ஈசா யோகா மையம் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்த போலிசார், அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யப்பட்டது. சமூக நீதிக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தாலும் ஏராளமான போலிசார் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.