அனிதாவுக்காக போராட்டம்- மருத்துவ வகுப்புகளை தொடங்கி வைக்காமல் புறக்கணித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் தனக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதால் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ வகுப்புகளை தொடங்கி வைக்காமல் புறக்கணித்துள்ளார்.
புதுக்கோட்டை: மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிக்கோரி புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலாம் ஆண்டு மருத்துவ வகுப்புகளை தொடங்கி வைக்காமல் புறக்கணித்தார்.
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் எனக்கூறி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிக்கோரி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியை அனைத்திந்திய மாதர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக புதுக்கோட்டை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ வகுப்புகளை தொடங்கி வைக்காமல் அமைச்சர் விஜயபாஸ்கர் புறக்கணித்தார்.
இதேபோல் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பும் அனிதாவுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலாமாண்டு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியையும் அமைச்சர் விஜயபாஸ்கர் புறக்கணித்தார்.