சேலம் - சென்னை புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம்.. சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு
சேலம் - சென்னை புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து சேலத்தில் இன்று மாலை மக்கள் திரள் போராட்டம் நடைபெறுகிறது.
சேலம்: சேலம் - சென்னை புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து சேலத்தில் இன்று மாலை மக்கள் திரள் போராட்டம் நடைபெறுகிறது. இதில் சீமான், பியுஸ் மனுஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சேலம் - சென்னை புதிய 8 வழி சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகவும் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் சேலத்தில் இன்று நடைபெறுகிறது.
சேலம் - சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். சேலத்திலிருந்து அரூர், செங்கம், திருவண்ணாமலை வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்படவிருக்கிறது.
தொடர் போராட்டம்
இதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதிய 8 வழி சாலை அமைப்பதற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
400 மீ. தூரத்துக்கு முட்டுக்கல்
இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பனங்காடு கிராம மக்கள் கூறுகையில், "எருமாபாளையம், பனங்காடு பகுதிகளில் நாங்கள் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத் தொழில் தான் வாழ்வாதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து 8 வழி பசுமை விரைவு சாலைக்காக நிலம் கையகப்படுத்த சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு முட்டுக்கல் நட்டு சென்றுள்ளனர்.
கைவிட கோரிக்கை
100-க்கும் மேற்பட்ட வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதனைக் கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் எந்தப் பயனும் இல்லை. எனவே இதைக் கைவிட வேண்டும்" என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீமான் பங்கேற்பு
இந்நிலையில் புதிய 8 வழி சாலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சூழலியல் செயற்பாட்டாளர் பியுஸ் மனுஸ் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 12-05-2018 சனிக்கிழமை மாலை 04 மணிக்கு சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார்.
கண்டன பொதுக்கூட்டம்
அதனைத் தொடர்ந்து மாலை 06 மணியளவில் சேலம் மாவட்டம் காமலாபுரம் கிராமத்தில் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக 570 ஏக்கர் வேளாண் நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இதில் சீமான் மற்றும் பியுஸ் மனுஸ் ஆகியோர் கண்டனவுரையாற்றுகிறார்கள்.