மூடு, மூடு, டாஸ்மாக்கை மூடு: மக்கள் அதிகார அமைப்பினருடன் சேர்ந்து போராடிய பாடகர் கோவன்
திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் அதிகார அமைப்பினர் திருச்சி துவாக்குடி சிப்காட்டில் இருக்கும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மக்கள் அதிகார அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகார அமைப்பினர் திருச்சி துவாக்குடி சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பாட்டு பாடி கைதான பாடகர் கோவனும் கலந்து கொண்டார்.
மேலும் விவசாய சங்க தலைவர் சின்னதுரை, பெண்கள், குழந்தைகள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திருச்சி, தஞ்சை, நாகை பகுதி மக்கள் அதிகார அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கோஷமிட்டனர்.
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.