200 அடி ஆழத்தில் 4 கிணறுகள்.. ஓபிஎஸைக் கண்டித்து பெரியகுளம் அருகே கடையடைப்பு!
பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேனி: பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது நூறு ஏக்கர் நிலத்தில் 200 அடி ஆழம் கொண்ட 4 கிணறுகளை வெட்டியுள்ளார். ஐந்தாவதாக ஒரு கிணறு வெட்டிவரும் நிலையில், லெட்சுமிபுரத்தில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்திய அதிகாரிகள் கிணறுகளை ஆய்வு செய்தனர்.
கிணறு வெட்டும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் லெட்சுமி புரத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளால்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கிணறுகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.