புதுவை முதல்வராக நாராயணசாமி..எதிர்ப்பு தெரிவித்து நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டம், கல்வீச்சு !
சென்னை: புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக நாராயணசாமி இன்று தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடந்த 16-ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
பின்னர் புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு வெளியே திரண்ட நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் அங்கு வந்த போலீசார் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் காவலர்களின் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் தனியார் விடுதிக்குள்ளேயே நாராயணசாமி பத்திரமாக தங்க வைக்கப்பட்டு பின்னர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
பல இடங்களில் நாராயணசாமிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்களாகியும் புதுச்சேரி முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் பெரும் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது முதல்வரை தேர்வு செய்த பின்னரும் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.